
எனது சின்ன சின்ன ஆசைகளை இங்கு பதிவு செய்கிறேன். படித்து முடித்து விட்டு அடி பாவி! இதுவா உனக்கு சின்ன சின்ன ஆசைகள் அப்படின்னு
கேட்கக் கூடாது. சரியா?
********
யாருமற்ற உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும்.
அதில் நான் மட்டுமே ராணியாக இருக்க வேண்டும்.
பூ, காய், கனி, செடி, கொடி, மரம் இவையனைத்தும்
பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும்.
மான், மயில், குயில், புறா, நாய் இவையனைத்தும்
எனக்கு தோழிகள் ஆக வேண்டும்.
மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும்.
பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும்.
உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும்.
நிலவினை கையில் பிடித்து அதனுடன்
கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும்.
நட்புக்கு இலக்கணம் நான் என்று
என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும்.
சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும்
அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று
தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும்.
பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும்
துடைத்து எடுக்க ஒரு ரப்பர்(அழிப்பான்) வேண்டும்.
எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில்
கடைகளில் கிடைக்கும் நாள் வர வேண்டும்.
நம்பிகைகுரிய நட்புகள் வேண்டும்.
சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும்.
சாக்கடை கலக்காத அரசியல் வேண்டும்.
மரண தேவன் கூட மக்களின் அனுமதி பெற்று
உயிரை எடுக்கும் நிலை வர வேண்டும்.
எப்போது எல்லாம் இந்த உலகம் பிடிக்கவில்லையோ
அப்போது எல்லாம் மீண்டும் தாயின் கருவறை
உள்ளே சென்று படுத்துக் கொள்ளும் உன்னத வரம் வேண்டும்.
தலையணைக் கூட தாய் மடியாக மாற வேண்டும்.
மனிதலோகத்திற்கும் மரணலோகத்திற்கும்
சென்று வர ஒரு நூறடி பாதை வேண்டும்.
மரணலோகம் பிடிக்க வில்லையெனில் மீண்டும்
மனிதனாக வந்து வாழ அற்புத நிலை வேண்டும்.
இவையனைத்தும் உண்மையாக நடக்கும் என்றால்
இன்னொரு பிறவி நான் பிறக்க வேண்டும்.
அப்போதும் கூட எனது நட்புகள் தான்
எந்தன் சுவாசக் காற்றாக இருக்க வேண்டும்..........
Comments
Post a Comment